திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மொரவெவ-மயிலக்குடாவ பகுதியை சேர்ந்த ஆர்.காமினி (51 வயது) அவரது மனைவி 42 வயது மற்றும் 07 வயதுடைய மகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
நொச்சிக்குளம் பாடசாலை விடுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நேராக வந்த முச்சக்கர வண்டி திரும்புவதற்காக முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்த மூவரும் மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.