கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் உட்பட மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், அதிக அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதாக வெளிநாட்டவர் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உட்பட மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு நடத்திய தனித்தனி சோதனைகளில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, நேற்று (17) துபாயிலிருந்து வந்த 51 வயது இந்திய நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கைகள்
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (75 அட்டைப்பெட்டிகள்) கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, இன்று18 நடந்த மற்றொரு சோதனை நடவடிக்கையில், துபாயில் இருந்து கடத்தப்பட்ட 21,200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் (106 அட்டைப்பெட்டிகள்) ரஸ்நாயக்கபுராவைச் சேர்ந்த 23 வயது நபர் பண்டாரநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னுமொரு சோதனையில், துபாயிலிருந்து 46,800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை (234 அட்டைப்பெட்டிகள்) கடத்த முயன்றதற்காக பன்னிபிட்டியாவைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மூன்று கைது நடவடிக்கைகள் குறித்தும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |