பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய விவகாரம்: கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதி
கிளிநொச்சி - கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன், அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பிரதான சந்தேகநபரைக் கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தர்மபுரம் பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சிசிடி கமரா ஒளிப்பதிவுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளர் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.