மகிந்தவின் தோளில் ஏறி நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களே நெருக்கடிகளுக்கு பொறுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவே கட்சியின் சகோதர கட்சிகள் என்று நம்பிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.
மகிந்தவின் பிரபலத்தை பயன்படுத்தி வந்தவர்களே அராஜக நிலைமைக்கு காரணம்
மகிந்த ராஜபக்சவின் பிரபலத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்திற்கு வந்த சகோதர கட்சிகள் எனக் கூறப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தன் காரணமாகவே நாடு அராஜக நிலைமைக்கு சென்றது.
அனைத்து நெருக்கடிகளுக்கும் இவர்கள் நேரடியாக பொறுப்புக்கூறவேண்டும்.
மக்களை மறக்க மாட்டோம்
அப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த விதத்தில் செயற்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பாக பெரும்பான்மையான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க கூடிய வகையில் செயற்படுவோம்.
மக்கள் கொண்டுள்ள அந்த நம்பிக்கையை சிதைக்கவோ, மக்களை மறக்கவோ மாட்டோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.