ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான, தட்சிண கயிலாயம் எனப் போற்றப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் நேற்று(17.04.2026) காலை மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பிரதம குருக்களின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த திருக்கோணேஸ்வரப் பெருமான் மற்றும் மாதுமை அம்பாள் ஆகியோருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்க சுவாமியும் அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர்.
பூஜைக்காக திரண்ட மக்கள்
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதற்கும், இறைவனின் அருளைப் பெறுவதற்கும் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருகோணமலை கோட்டைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர். "அரோகரா" கோஷம் விண்ணதிர, பக்தர்கள் நீண்ட வடம்பிடித்து தேரை இழுத்துத் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், அன்னதானம் மற்றும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பொலிஸாரும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுவாமி வீதியுலா வந்தபோது வீதியெங்கும் பக்தர்கள் நிறைகுடம் வைத்து, அர்ச்சனை செய்து மனமுருகி வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.


