ஈழத் தமிழர்களின் உரிமைகள் குறித்து பின்லாந்து நாடாளுமன்றில் கேள்வி
பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் Bella Forsgrén, நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து எழுத்துமூல கேள்வி சமர்ப்பித்தார்.
25.02.2026 அன்று, பின்லாந்தும் இலங்கையும் Helsinkiயில் அரசியல் ஆலோசனை அமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் Bella Forsgrén, 15.04.2026 அன்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒரு உத்தியோகபூர்வ எழுத்து கேள்வியை சமர்ப்பித்தார்.
கடுமையான போர் குற்றங்கள்
அதில், இந்த MoU-வை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பின்லாந்தின் மனித உரிமை அடிப்படையிலான வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்தவும், தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த கொழும்பு அரசின் மீது அழுத்தம் செலுத்தவும் பின்லந்தூ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Forsgrén, 1948 முதல் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசு மறுத்து வருகிறது என்றும், பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பின்லாந்தின் UN மனித உரிமைகள் பேரவைக் காலத்தில் ஆதரித்த UNHRC தீர்மானம் 51/1 உட்பட, சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பல அறிக்கைகள் கடுமையான போர் குற்றங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கட்டாய இடம்பெயர்வுகள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பதிவு செய்துள்ளன; இவை அனைத்தும் இனஅழிப்பாக கருதப்படக்கூடியவை என்றும், பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய NPP அரசு கூட ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைக்கவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கவும் மறுக்கும் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்பு
MP Bella Forsgrén வெளியுறவு அமைச்சர் Elina Valtonen இற்கு பின்வரும் கேள்வியை முன்வைத்தார்: “பின்லாந்தும் இலங்கையும் இடையிலான அரசியல் ஆலோசனை அமைப்பை பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போரின்போது இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட பின்லாந்து எவ்வாறு செயல்பட திட்டமிட்டுள்ளது?”
இந்த கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனனுக்கு நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்க 21 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதியில் மிகவும் மோசமான பதிவைக் கொண்டுள்ள ஒரு அரசுடன் பின்லாந்து இருதரப்பு ஒத்துழைப்பை (Bilateral relations) வலுப்படுத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது.
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்பைத் தவிர்க்கும் கொழும்பு அரசுடன் உறவுகளை வலுப்படுத்தும் நிலையில், சர்வதேச அரங்கில் தாம் முன்னிறுத்துவதாகக் கூறும் மனித உரிமை மையப்படுத்தப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்லாந்து உண்மையில் கடைப்பிடிக்கிறதா என்பது கேள்விக்குறியாகிறது.
பொருளாதார மற்றும் சமூக நலன்கள் அதன் அடிப்படை மனித உரிமை மதிப்புகளை மிஞ்ச அனுமதிக்கக் கூடாது. ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் தீர்க்கப்படும்வரை, Helsinki தனது நிலையை பயன்படுத்தி கொழும்பு அரசின் மீது அதிகபட்ச அழுத்தம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.