50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் தடுப்பூசி - பேராசிரியர் நீலிகா மாலவிகே
தடுப்பூசி மூலம் கோவிட் நிலைமையைச் சாதாரண தடிமன் நிலைமையாக மாற்ற வேண்டும் என்பதே எஸ்ராசேனேகா தடுப்பூசியைத் தயாரித்தவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இலங்கை சனத் தொகையில் 63 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் 52 வீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கோவிட் வைரஸின் அடையாளம் காணப்படும் புதிய திரிபுகளுக்கு அமையத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வருடந்தோறும் கோவிட் தடுப்பூசியை வழங்க நேரிடும்.
குறிப்பாக 50 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் எதிர்காலத்தில் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை வழங்க நேரிடும்.
கோவிட் வைரஸ் தொற்ற முன்னர் இரண்டு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமை அல்லது தொற்று ஏற்பட்ட பின்னர் அதனைப் பெற்றுக்கொண்டவர்களின் உடலில் ஏற்படும் ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலமானதாக இருக்கும். இதன் காரணமாக கோவிட் வைரஸ் தொற்றும் ஆபத்து மிகவும் குறைவு எனவும் பேராசிரியர் மலவிகே மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
50 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் மாத்திரை தடுப்பூசி வழங்க நேரிடும் என ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பான பேராசிரியர் நீலிகா மாலவிகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு மூன்றாம் மாத்திரை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய அவசியமிருக்காது எனக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு மூன்றாம் மாத்திரையொன்று வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என உலகளாவிய ரீதியிலான தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 50 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு மூன்றாம் மாத்திரை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய அவசியமிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.