கோவிட் தொற்றால் அழிவில் பிரேசில்! - இலங்கையை ஒப்பிடும் ஹர்ச டி சில்வா
கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக மோசமான அழிவை எதிர்நோக்கி வரும் பிரேசில் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கோவிட் கட்டுப்பாடு சில ஒற்றுமைகளை காணக் கூடியதாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆட்சியாளரின் பொறுப்பற்ற தன்மைக்கு இணையான நிலைமை கோவிட் நிலைமையிலும் நாட்டில் காணமுடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரேசில் நாட்டில் 11 செனட் உறுப்பினர்கள் அடங்கிய விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தளவுக்கு மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமா என்பதை அறிய இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அப்படி அரசாங்கமும் ஜனாதிபதியும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டுமாயின் பிரேசில் ஜனாதிபதி போல்சேனானாரோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை இந்த விசாரணைக் குழு வழங்கும்.
இலங்கையிலும் ஆரம்பத்தில் சிரித்தனர். ஏன் நாட்டை முடக்க வேண்டும் என்று கேட்டனர். கலசங்களை ஆற்றி போட்டனர். அதன் பின்னர் பாணி மருந்தை அருந்தினர். அதேபோல் இலங்கையில் நான்கு சுகாதார அமைச்சர்கள் இருக்கின்றனர்.
அதேபோல் இராணுவத்தின் ஜெனரல் ஒருவரே கோவிட் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார். எனினும் பிரேசில் நாட்டை விட இலங்கையில் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சத வீதமானனோருக்கே இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பற்ற செயல் என்றால், இதுவும் அப்படியான பொறுப்பற்ற செயல் அல்லவா?.
அரசாங்கம் தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது. இதனை புள்ளிவிபரங்களோடு ஒப்புவிக்க முடியும்.
சுகாதாரம் தொடர்பான விசேட நிபுணர்களும் இதனையே எமக்கு சுட்டிக்காட்டியுள்ளனர் என ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.