துஸ்பிரயோகம் செய்யப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்! குற்றச்சாட்டை மறுக்கும் அரசாங்கம்
பயங்கரவாதத் தடைச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் கடந்த 10ம் திகதி இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருத்தமளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொடிய பயங்கரவாதம் தலைதூக்கிய காரணத்தினால் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சில விடயங்களை திருத்தி அமைப்தபற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஐக்கிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்துள்ளார்.