காலி முகத்திடல் போராட்டத்திற்கும் தமிழர்களின் போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு : இ.கதிர்
“சிங்கள மக்களின் போராட்டம் உணவுக்கான போராட்டம் எனவும் தமிழர்களின் போராட்டம் உரிமைக்கான போராட்டம், இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு” என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதற்கான சாட்சியங்களாக அந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், இந்த நிகழ்வினை எவ்வாறு நினைவுகூருவது? தொடர்ந்தும் அரசின் அடக்கு முறைக்கு அஞ்சி கடைப்பிடிப்பதா? மாறாக நாங்கள் எழுச்சி கொண்ட மக்களாக நினைவுகூருவதா? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாதாரண விடயமல்ல.
இந்நாளை அனைவரும் ஒன்று திரண்டு தேசிய எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி நினைவுகூர வேண்டும் என அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மக்களின் கொள்ளைக்கு மாறாக ஒவ்வொரு அரசியல்கட்சி பிரமுகர்களும் கட்சிக் கொள்கைகளை இங்கு வந்து பிரகடனப்படுத்துவதையும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும் நாங்கள் காண்கின்றோம். மக்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியத்தின் பெரும் சக்தியாக இந்த நாளினை நாங்கள் நினைவுகூர வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எழுச்சி போராட்டம் பெரிய அளவில் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்களின் உரிமை போராட்டத்தின் பால் மரணித்த மக்களின் நினைவேந்தல் என்பது ஒரு தேசிய எழுச்சி போராட்டமாக மாற்றம் பெறவேண்டும்.
பல வலிகளைச் சுமந்து போராடிய எமது இனம் இன்று சாதாரண நிலைமைக்குள் அரசியல்வாதிகளால் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். தென்னிலங்கையில் சிங்கள மக்கள் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் ஒரு உணவுக்கான போராட்டம். எங்கள் போராட்டம் வயிற்றுப்பசியினையும் பார்க்காது அதனையும் தாண்டி உரிமை பசிக்கான போராட்டம்.
இரண்டு போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது. எங்கள் போராட்டத்தினை தெற்கில் கலப்பது உரிமைக்கான போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயலாகத்தான் இருக்கும். தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும், போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
இசைப்பிரியாவின் புகைப்படத்தினையும் அங்கு வைத்துள்ளார்கள். இந்த போராட்டத்திற்குத் தமிழர்களின் அனுசரணையினை கொண்டு செல்பவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகத்தான் இருக்க முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தினை அடக்குவதற்கு அந்த போராட்டத்திற்குப் பின்னால் பல சக்திகள் இருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் தொடர்பு இருக்கின்றது, டயஸ்போராவின் தொடர்பு இருக்கின்றது என பயங்கரவாத செயற்பாடு என்று சொல்லி போராட்டத்தினை அடக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு சான்றாக இதனை உறுதிப்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் இராணுவ பிரசன்னத்தினை நாட்டில் உருவாக்கி அதன் ஊடாக மக்கள் போராட்டங்களை இல்லாது ஒளித்து இராணுவ ஆட்சிமுறையினை நிறுவி அதன் ஊடாக ஆட்சியினை நிறுவலாம் என சிங்கள பேரினவாத சக்திகள் நினைக்கின்றன.
இவ்வாறு செயற்படுவது இலங்கை அரசின் எதிர்கால திட்டத்திற்குச் சார்பாக இருக்கும் என நாங்கள் நினைக்கின்றோம். சிங்கள மக்களின் போராட்டமும், தமிழ்மக்களின் போராட்டமும் வேறுபட்டது. அந்த போராட்டத்துடன் நாங்கள் இணைந்து போராட்டம் செய்வதற்கான சூழல் தற்போது இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்படலாம் அல்லது இந்த அரசே தொடர்ந்து இருக்கலாம்.
சிங்கள மேலாதிக்க சக்தி சிங்கள பௌத்த தலைமைத்துவங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இல்லை. எதிர்காலத்தில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. பௌத்த பீடம் எடுக்கும் தீர்மானம்தான் இலங்கையின் ஆட்சியினை தீர்மானிக்கும்.
அவர்கள் தமிழ்மக்கள் தொடர்பாக என்ன முடிவினை எடுக்கப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வரையும் நாங்கள் சிங்கள மக்களின் போராட்டங்களை அங்கீகரிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த விடயங்களினை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.
இந்த கொதி நிலையினை சிங்கள அரசாங்கமும் சரி, சிங்கள மக்களும் சரி தமக்கு சார்பாகத் தமிழர்களைப் பயன்படுத்துவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் வரப்போகும் சிங்கள ஆட்சியாளர்கள் இதனைவிட மோசமாகவும் இருக்கலாம் அல்லது இவர்களாகவும் இருக்கலாம்.
எங்கள் அரசியல் தலைவர்கள் சிலர் இதனை எமக்கு சாதகமான விடயமாக மக்கள்
மத்தியில் சித்தரித்து வருகின்றார்கள். அவர்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். இது
தவறான விடயம். எமது மக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தெளிவாகச் சிந்தித்துச்
செயல்பட வேண்டும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.



