பெயர் பலகையை மாற்றுவதால் வைத்தியசாலை அபிவிருத்தியடையுமா..!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததாக காணப்படும் புற்றுநோய் சிகிச்சை பிரிவை த்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகளை யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
வைத்தியசாலையை மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுக்காமல், மாகாண அமைச்சின் கீழேயே வைத்தியசாலை இயங்க வேண்டும். அதற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டாமல் தான் அபிவிருத்தி செய்வேன் என வைத்தியசாலையை ஒதுக்காது அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஈழமக்கள் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாகாண சபைகளுக்கு என ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை அபிவிருத்தி எனும் பெயரில் மத்திய அரசாங்கம் மீண்டும் பறித்துக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கடந்த காலங்களில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வோம், உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி தருவோம் என்றும் கூறப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை கூறி வைத்தியசாலையை பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மத்தியின் கீழ இயங்கும் வடக்கில் உள்ள போதனா வைத்தியசாலை ஆகும். அங்கு சகல வசதிகளும், உள்ளனவா ? வைத்தியர் வெற்றிடங்கள், தாதியர்கள் வெற்றிடங்கள், போதிய உட்கட்டுமான வசதிகளும் காணப்படுகிறனறனவா ?

மத்தியின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை சென்றால் அபிவிருத்தி அடையும் என சொல்லுபவர்கள், இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துளளார்.
இவ்வாறான நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்தியின் ஆளுகைக்கு கீழ் கொண்டு செல்ல வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரான ச. சிறிபவானந்தராசா கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார்.
முனைப்பு காட்டும் கஜேந்திரகுமார்
அதனால் அவரது தலைமையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வைத்தியசாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.
இதன்போது, வைத்தியசாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கஜேந்திரகுமாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபை நாகரிகம் அன்றி தன்னிலை மறந்து ஒருமையிலும் விளித்து தர்க்கப்பட்டனர். அவ்வாறான கடுமையான கருத்து முரண்பாடு ஏற்பட்டு, சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட போதிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரான ச. சிறிபவானந்தராசா வைத்திய சாலையை மத்தியிடம் கையளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் 19ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதும், தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்பினை கஜேந்திரகுமார் உள்ளிட்ட தரப்பு முன் வைத்தது.
இருந்த போதிலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் வைத்தியசாலையை மத்திக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்து, தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு நேரில் சென்று வைத்தியசாலை உட்கட்டுமான வசதிகளை பார்வையிட்டதுடன், வைத்தியர் குழாம் மற்றும் வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர் உள்ளிட்டவர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

அதில் குறிப்பாக தெல்லிப்பழை வைத்தியசாலையை மத்தியின் கீழ் கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையிடப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் தனக்கு மூன்று தெரிவுகள் உள்ளதாகவும், முதலாவது, இந்த வைத்தியசாலையை வட மாகாண சபையின் கீழேயே தொடர்ந்து வைத்திருப்பது.
அதே சமயம், அதற்குத் தேவையான நிதி, புதிய உபகரணங்கள், கட்டிடங்கள் மற்றும் பணியாளர்களை மத்திய அரசு மூலமாக வழங்குவது. இரண்டாவது, பலரும் கூறுவது புற்றுநோய் பிரிவை மட்டும் ஒரு விசேட பிரிவாக (Specialized Unit) மத்திய அரசு (Line Ministry) பொறுப்பேற்பது.
மூன்றாவது முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவது இதில் முதலாவது விடயத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என நினைக்கிறேன். எனவே, இது தொடர்பாக ஆராய அமைச்சில் இருந்து ஒரு குழுவை நியமிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.
பல தரப்பினரிடம் இருந்து மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம். ஏனெனில், மத்திய அரசு பொறுப்பேற்பது என்பது சேவைகளை இன்னும் சிறப்பாகப் பேணுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். வெறும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாலோ அல்லது அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதாலோ மட்டும் சேவைகளை மேம்படுத்திவிட முடியாது.

தற்போதைய சூழ்நிலையில், இந்த வைத்தியசாலையை உடனடியாக ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏனெனில், ஒரு ஆதார வைத்தியசாலைக்கும் (Base Hospital) மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் (DGH) இடையே உள்ள கட்டமைப்பு ரீதியான இடைவெளி மிகப்பெரியது.
அரசியல் காரணங்களுக்காக நான் இதன் பெயர் பலகையை 'DGH' என்று மாற்றிவிட முடியும், ஆனால் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் பெயர் மாற்றுவது எங்களது வழக்கமும் அல்ல, நோக்கமும் அல்ல. என தெரிவித்து இருந்தார்.
அதேவேளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டம் ஒன்றினை அமைக்கும் பணிகளுக்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் பணிகளை துரித கெதியில் முன்னெடுத்து, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்த கட்டடத்தை கையளிக்க எதிர்பார்க்கின்றோம்.
அந்த கட்டடம் கையளிக்கப்படும் போது வைத்தியசாலைக்கு தேவையான ஆளணிகளை நிரப்பவும், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் கையளிப்ப்போம் எனவும் சுகாதார அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு , யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011ஆம் ஆண்டு கால பகுதியிலையே மீள ஆரம்பிக்கப்பட்டது.
தற்போதும் வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்களுக்கான ஒரு ஆதார வைத்தியசாலையாக ,பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. எனவே அன்றைய கலந்துரையாடலில் "சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் சேவையாகும்.
எனவே அரசியல் வேறுபாடுகளை விடுத்து, தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் " என கடற்தொழில் அமைச்சர் கூறியது போன்று, வைத்தியசாலையை வைத்து அரசியல் செய்வதனை அனைத்து தரப்பினரும் நிறுத்தி, வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 30 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan