வவுனியாவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு புகுந்து ஐந்தரைப்பவுண் தங்க நகைகள் திருடிச் சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா திருநாவற்குளம் முதலாம் ஒழுங்கையில் தனிப்பட்ட விடயமாக வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றவேளையில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் மூன்று பவுண் இரண்டு தங்கச் சங்கிலி, இரண்டரைப்பவுண் காப்பு என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்.
ஒன்பது இலட்சத்தி எழுபத்தையாயிரம் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 45 பவுண் நகைகள், பணம் திருடப்பட்டுள்ளன.
ஆசிரியர்களாகப் பணியாற்றும் கணவன், மனைவி இருவரும் பாடசாலைகளுக்குச் சென்ற நேரத்திலேயே, இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பகல் வேளையில் வீட்டின் கூரை வழியாக உட்புகுந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 45 பவுண்களுக்கு மேலான நகைகளையும், இரண்டு 2 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-ராகேஷ்



