வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்: பெருந்தொகை பணம் திருட்டு(Photos)
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இதன்போது 17 பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள்
ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் மீது தாக்குதல்
திருவையாறு பகுதிய சேர்ந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு நுழைந்த திருடர்கள் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன் மனைவி இருவரையும் தாக்கியதுடன் கை, கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என வினவியுள்ளனர்.
இதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது தாலிக்கொடி எங்கே எனக்கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற போது கைத்தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இனையடுத்து வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரக்குற்றிகள் மீட்பு
சாவகச்சேரி பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை காலை சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மேல் கற்களை பரவி மரக்குற்றிகளை எடுத்து வந்த போதே சாவகச்சேரி பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகநபரையும் சான்றுப்
பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி-தீபன்