இலங்கை கோவிட் நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கரிசனை
இலங்கை கோவிட் நிலைமைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டொக்டர் டட்ரோஸ் அடானோம் இந்த விடயம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கோவிட் நோய்த் தொற்றுறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும் வைத்தியசாலை அனுமதி எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர உதவிகள் இந்தியாவிற்கு மட்டும் தேவைப்படவில்லை எனவும் இலங்கை, நேபாளாம், வியட்நாம், தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வினை பதிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகையினால் இதுவரையில் 3.3 மில்லியன் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் முதல் அலையை விடவும் இரண்டாம் அலை தீவிரமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி விநியோகம் பெரும் சவாலாக காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் இலங்கையில் 31 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.