இலங்கையில் இந்த வார்த்தைக்கு தடை! தீர்மானம் எடுக்கப்படுவது தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல தகவல்
'லொக்டவுன்' என்ற சொல்லைத் தடை செய்யப்பட்ட சொல்லாகப் பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்ததாவது,
கோவிட் வைரஸால் நாட்டுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதைத் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், லொக்டவுன் என்ற சொல்லைத் தடை செய்யப்பட்ட சொல்லாக்குவதற்குத் தான் சுகாதார அமைச்சர் என்ற விதத்தில் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்குமாறு அனைவரும் கூறுவதானது, மிகவும் இலகுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு முடக்கப்பட்ட போதிலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு ரூபாவினாலேனும் குறைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இந்தத் தருணத்தில், தம் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை பொறுத்துக் கொண்டு, தமது நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்க்கு எதிரான நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்பட்டால் அதனை இலவசமாக மக்களுக்கு வழங்குவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது என்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளுக்காக சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆயிரம் ரூபா விதம், மூன்று தடவைகள் தமது அரசு மக்களுக்கு நிவாரண உதவித் திட்டத்தை வழங்கியது எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.