ஜனாதிபதி பதில் வழங்கிய விதம் மிகவும் தவறானது! நளின் பண்டார
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாட்டோவின் உரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதில் வழங்கிய விதம் மிகவும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஹரின் பெர்ணான்டோ நாட்டின் நிலைமைகள் தொடர்பில் பேசியிருந்தார். அது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகக் கூறியிருக்க வேண்டும்.
எனினும், ஜனாதிபதி அச்சுறுத்தும் வகையில் பதில் வழங்கியுள்ளார்.
“ஜனநாயகரீதியாக மனிதாபிமான ரீதியாகவும் செயற்பட வேண்டிய ஜனாதிபதி, ஏகாதிபத்தியவாதியாகவும், பசிஸ்ட்வாதியாகவும் செயற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்புக்காக நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார் என்ற விடயத்தில், அரசியலைமைப்பில் தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
எனவே நாடாளுமன்ற வரப்பிரசாதங்களின் பிரகாரம், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.“ எனவும் தெரிவித்துள்ளார்.