கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திருப்பம்! சுதந்திரக்கட்சிக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம் பொருந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக்கட்சி வெளியேற முன்னர் கட்சியை வெளியேற்ற தொடர்ந்தும் பல அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை,எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாற்றப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பதாகவும், மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பிற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காத்திருப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான புதிய கூட்டணியொன்று தகுதியான ஒருவரை பொதுவேட்பாளராக களமிறக்கவும் எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.