தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்குகின்றனர்: முபாரக் அப்துல் மஜீத் (video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர், இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ், முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்பதுடன், இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் நேற்று (05.12.2022) அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இதன் மூலம் தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திற்கு வரமுடியும் இதனால் தான் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இன பிரச்சினை
நாடாளுமன்ற அதிகாரங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கும் வழிமுறைகள் தான் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாவட்ட சபையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களின் அறிக்கையில் இருந்து தெரியவருகின்றது.
எதையும் இலகுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏற்றுக்கொள்ளாது என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மை.
மாகாண சபையை கூட தமிழீழ விடுதலைப்புலிகள் மறுத்து ஏற்காது வந்துள்ளதை நாம் அறிகின்றோம். பின்னர் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாண சபையை ஏற்றுக்கொண்டு தேர்தலிலும் போட்டியிட்டிருந்தது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாங்கள் ஆராய்ந்த அளவில் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது தான் உண்மையாகும்.
நல்லிணக்கம்
ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருந்தால் பல பிரச்சினைகளை எப்போதே தீர்த்திருக்க முடியும். அவர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையையே கோருகின்றனர்.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ், முஸ்லிம் கலவரம் ஏற்படும்.
இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும். இதன் மூலம் தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திற்கு வரமுடியும். இதனால் தான் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாண சபை போதும் என இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லவில்லை. இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட இரு மாகாண சபைகளையும் ஏற்கின்றோம் என்பதை கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை கூறவே இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜால்றா அடித்து கொண்டு இருக்கின்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட இது குறித்துமௌனமாக இருக்கின்றார்.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜால்ராவாகவே இருக்கின்றார் என்பதை தவிர முஸ்லீம்களின் தலைவராக அவர் இல்லை.
தங்களது நாடாளுமன்ற அதிகாரங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கும் வழிமுறைகள் தான் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரமாகும் என்பதை தெளிவாக கூற விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.