நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்குமாறு வலியுறுத்து
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாவது மாத்திரை கோவிட் தடுப்பூசியும் வழங்கப்பட வேண்டுமென நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பிலான நிபணத்துவ மருத்துவர் டொக்டர் ராஜீவா டி சில்வா தெரிவித்துள்ளார்.
புற்று நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஏதேனும் ஓர் தடுப்பூசியின் முதல் இரண்டு மாத்திரைகளின் பின்னர் மூன்றாம் மாத்திரையும் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களுக்கு முதல் இரண்டு தடுப்பூசிகளை வழங்கி ஒரு மாத காலத்தின் பின்னர் பைசர், மொடர்னா அல்லது அஸ்ட்ரசென்கா ஆகிய தடுப்பூசிகளில் ஒன்றை வழங்க வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.
சில நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து வகைகள் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும் அவ்வாறானவர்களுக்கு மூன்றாம் மாத்திரை வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் டொக்டார் ராஜிவ டி சில்வா தெரிவித்துள்ளார்.