வடக்கு, கிழக்கில் இடம்பெற்றது கூட்டமைப்பினரின் போராட்டம் - கு. திலீபன்
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாகத் தெரியவில்லை, அது கூட்டமைப்பினரின் போராட்டமாகத் தான் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் (Kulasingam Thileepan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாகத் தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாகத் தான் தெரிகின்றது.
காரணம் நான் செல்கின்ற அல்லது பார்க்கின்ற இடங்களில் விவசாயிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.
அவர்களது வட்டார உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தான் அந்த போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.
சேதன பசளை தொடர்பாக சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அரசாங்கம் அந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துள்ளது.
விரைவில் விவசாயிகளிற்குச் சாதகமான பதில் வந்தடையும். கடந்த காலங்களிலும் மீனவர்களுக்கிடையே பிரச்சினை நீடித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றதில் இருந்து இந்த பிரச்சினை கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே இருக்கிறது.
ஆனால் சுதந்திரமாக எந்தவித அழுத்தமும் இல்லாமல் செயற்படுகின்ற ஒரு அமைச்சர். இன்றும் கூட அமைச்சர் எங்களுடைய பிரதிநிதிகள் உட்பட அனைவரிடமும் மிகவும் அவசரமாகச் செய்திகளை வழங்கி மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
மக்களுக்கான பிரச்சினையை முற்று முழுதாக கண்காணித்துத் தீர்த்து கொண்டு வருகின்ற
ஒருவரை, கூட்டமைப்பினர் போல் கையாலாகாதவர்கள் துதி பாடுவதையிட்டு நான் பெரிதாக
அலட்டிக் கொள்ளப் போவதல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.