கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பல கோடி ரூபா மோசடி செய்த நபர்
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் 4 கோடி 97 இலட்சத்து 9 ஆயிரத்து 30 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர மேலதிக நீதவான் ஐ.எம்.எஸ். பண்டார இலங்சிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொச்சிக்கடை, பள்ளன்சேனை, மார்ஷல் வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி
களனி, ஹிம்புடுவெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பேலியகொட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து ஆறு சந்தர்ப்பங்களில் தனது வங்கிச் கணக்கிற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்துகொண்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிணை வழங்க மறுப்பு
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், இதில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தேடப்பட்டு வருவதால் சந்தேகநபருக்கு பிணை வழங்க கூடாதென பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அடுத்த வழக்குத் தவணையின் போது விசாரணைகளின் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்குப் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.