மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம்
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும் சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு நேற்று (26.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே பண்ணையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொடர் போராட்டம்
கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக நேற்று (25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.
மேய்ச்சல் தரை காணி
அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இதுத் தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சீனிதம்பி நிமலன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்தியள்ளார்.
சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவித்துள்ளார்.
வாழ்வதாரம் கேள்விக்குறி
தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம். இவர்கள் அத்துமீறி குடியேறியமையால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும், இதோடு வெட்டிடி போட்டுள்ளார்கள்.
இதோடு 15 மாடுகள். என்னுடைய 50 பதிவு செய்து, 15 மாடுகள் இவ்வாறு கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம்”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
