சீரற்ற காலநிலையுடன் கோவிட் பரவல் அதிகரிக்கும் அபாயம்! வைத்திய நிபுணர் சுதத் சமரவீர
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் கோவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் நபர்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புடன் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதென்பது இயல்பாகும்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனிடையே, கடந்த சில தினங்களாக நாட்டில் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவுகிறது.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் கூட பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
பெருமளவானோர் ஒரு முகாமில் தங்க வேண்டியேற்படும் போது ஒருவருக்கு தொற்று காணப்பட்டால் கூட அது அங்குள்ள சகலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
எனவே முகாம்களின் தங்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதோடு, தமது குடும்பத்தாருடன் மாத்திரம் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.