திருகோணமலை மாவட்டத்திலும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் திருகோணமலை மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று (30) முப்படையினரின் பாதுகாப்புடன் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இன்றையதினம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.
அத்துடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எரங்க குணசேகரவின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் மஹதிவுல்வெவ கிராமத்தில் வசித்து வரும் 882 பேருக்குத் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் நாளை 31ம் திகதி தெவனிபியவர கிராம மக்களுக்கும் முதலாம் திகதி ரொட்டவெவ கிராமத்திற்கும் 2ஆம் திகதி கம்ப கொட்ட, நொச்சிகுளம், சாந்திபுரம் ஆகிய கிராமத்திற்கும், 3ஆம் திகதி எத்தாபெந்திவெவ கிராமத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாகவும் வைத்திய பொறுப்பதிகாரி எரங்க குணசேகர தெரிவித்தார்.
இதன்போது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் லசித்த, தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் தமது கடமையினை எந்த பிரச்சினையும் இன்றி மிகவும் அர்ப்பணிப்புடன் செய்தமைக்காக தமது நன்றியினையும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

