அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாய் 4.5 வீதம் மதிப்பிறக்கமடைந்துள்ளது
2020 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 24 ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 4.5 வீதம் மதிப்பிறக்கமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனை தவிர இந்த காலப் பகுதியில் யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாய் 12.3 வீதம் மதிப்பிறக்கமடைந்துள்ளது. ஜப்பானிய யென்னுக்கு நிகராக 9.0 வீதமும், ஸ்ரேலிங் பவுணுக்கு நிகராக 7.8 வீதமும், இலங்கை ரூபாய் மதிப்பிறக்கமடைந்துள்ளது. இந்திய ரூபாவுக்கு நிகராக இலங்கை ரூபாய் 1.1 வீதம் மதிப்பிறக்கமடைந்துள்ளது.
இலங்கை ரூபாய் தேவையற்ற வகையில் மதிப்பிறக்கமடைவதை தவிர்க்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.
கடந்த சில தினங்களாக பணப் பரிமாற்ற வீதங்கள் தேவையற்ற வகையில் ஏற்றம்,இறக்கம் கண்டுள்ளதாகவும் இதனால், வேறு நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் தேசிய வெளிநாட்டு அந்நிய செலாவணி சந்தையில் ஏற்ற, இறக்கங்களை கட்டுப்படுத்த பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.