பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகிறது
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் திங்கட் கிழமைக்கு பின்னர் மேலும் நீடிப்பதா இல்லையா என்பது, காணப்படும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
19 ஆம் அல்லது 20 ஆம் திகதி தீர்மானம் தொடர்பாக அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கருத்துவெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என கோவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டுமாயின், சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள வைரஸ் பரவல் மற்றும் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.