அரசாங்கத்தின் சதி முயற்சியே வடக்கு மாகாண சபை நடைபெறாமல் இருப்பதற்கு காரணம்! சிறீதரன் எம்.பி
அரசாங்கத்தின் சதி முயற்சியே வடக்கு மாகாண சபை நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம்.
நடத்தினால் தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் அரசாங்கத்திடம் நிலவுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கட்டகாடு பகுதியில் இன்றைய தினம் மக்கள் சந்திப்பு மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலேயே 13ஆம் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபை தேர்தல் முறைமையானது இன்று கடந்த மூன்று வருடங்களாக இலங்கை முழுவதும் செயலிழந்து இருக்கின்றது.
இவ்வாறு மாகாணசபைகள் செயலிழந்து இருப்பது வடக்கு மாகாணத்திலே வாழுகின்ற சமஸ்டி அடிப்படையிலான சுயாட்சியை விரும்புகின்ற தமிழர்களுக்கு அவர்களின் காலத்தினை இழுத்தடிக்கின்ற சதி முயற்சியாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.
அத்துடன் இப்பொழுது மாகாணசபைத் தேர்தலை வைத்தால் தென்னிலங்கையிலே சிங்கள மக்களின் ஆதரவு நமக்குக் கிடைக்காது நாம் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அதனால் அரசாங்கம் இந்த தேர்தலை வைக்கத் தயங்குகின்றது. ஆனால் தமிழ் மக்கள் தமது தமிழ் பிரதேசங்களில் நமது அரசியல் உரிமைகளைப் பெற்றெடுத்தற்காக மற்றும் இறந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்காக இந்த மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.
நாங்களும் இந்த கோரிக்கையைப் பலமுறை முன் வைத்து இருக்கின்றோம்.
இப்பொழுதும் கூட நாங்கள் அரசாங்கத்திடம் கோருவது யாருடைய நிர்ப்பந்தங்களோ நெருக்கடிகளோ இல்லாது நியாயமான முறையில் தேர்தல் என்ற அடிப்படையில் மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடாத்தி அபிவிருத்திகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.