பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த!
புதிய இணைப்பு
பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
அங்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.
முதலாம் இணைப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று பங்களாதேஷ் செல்லவுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் டூஷய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் மஹிந்த அங்கு செல்கின்றார்.
பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் வங்கபந்து ஷேய்க் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமரின் இந்தப் பயணம் அமையவுள்ளது.
கோவிட் - 19 தொற்று நோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்க, கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைத் தொடர்ந்து பங்களாதேஷ் நாட்டுக்கான இராஜதந்திர பயணத்துக்கு இலங்கை சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கபந்து ஷேய்க்முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் மஹிந்த இன்று பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.




