ஈஸ்டர் தாக்குதல் குறித்து முதலில் பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டும்! - ஜே.வி.பி கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அதன் பின்னர் ஜே.வி.பியிடம் விசாரணை நடாத்த முடியும் எனவும் ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட வேண்டுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கூறியிருந்தார். இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பிமல் ரட்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இப்ராஹிம் ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட முன்னதாக அவருக்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் கௌரவப்பட்டங்கள், விருதுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சஹரான்களுக்கு யார் சம்பளம் வழங்கியது, சஹரான் உள்ளிட்ட 21 பேருக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டது? இந்த விடயங்கள் குறித்து மஹிந்தவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு வாருங்கள். ஏனெனில் சஹரானுக்கு சம்பளம் வழங்கியதாக மஹிந்த பொதுவெளியில் ஒப்புக்கொண்டார். இப்ராஹிம் ஹாஜியார் என்ற வர்த்தகருக்கு மஹிந்த அரசாங்கம் விருது வழங்கியது.
இப்ராஹிமிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க முன்னதாகவே மஹிந்த அரசாங்கம் விருதுகளை வழங்கியுள்ளது. தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இப்ராஹிம் ஹாஜியாருக்கு கௌரவ பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் 2015ம் ஆண்டுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட முன்னதாக நிகழ்ந்தவை என பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
