மின்வெட்டு காலம் அதிகரிக்கலாம் - ஆனந்த பாலித
அடுத்த எரிபொருள் ஏற்றுமதி எப்போது நாட்டிற்கு வரும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை முதல் மின்வெட்டு காலம் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கையடக்க செயலியில் எரிபொருள் கிடைப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடாமல் எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்பட்டதன் விளைவாக நேற்றிரவு அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
எரிபொருள் வரும் திகதிகள் அறிவிக்கப்படவில்லை
எவ்வாறாயினும், முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ சேமிப்பு முனையங்களில் இருந்து எரிபொருள் அனுப்பப்பட்ட பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செயலியின் குறிகாட்டிகளுக்கு வெளியே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அவர் சாட்டினார்.
எரிபொருள் ஏற்றுமதிக்காக 42 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் வரும் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 85 விகித நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும், வரிசைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்ல, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும், அதனால் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.