பிரதமரின் செயலகத்திற்கு சென்று சேதம் விளைவித்தவர்களை தேடும் பொலிஸார்
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் கொழும்பு 7 மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்திற்குள் புகுந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சில சந்தேக நபர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களம் மக்களின் உதவிகளை கோரியுள்ளது.
சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சரியாக அடையாளம் காண்பதற்காக பொலிஸ் திணைக்களம் சில நபர்களின் புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் காணொளி காட்சிகள் போன்றவற்றை பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காண்பது அவசியம் என பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த போராட்டகாரர்ள் கடந்த 13 ஆம் திகதி பிரதமரின் செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தால், 0718594950, 0718594901, 0718594924, 0112422176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு குற்றவியல் விசாரணை திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.