எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் திடீர் மரணம் - சிகிச்சையளிக்காத மருத்துவமனையால் ஏற்பட்ட விபரீதம்
பண்டாரகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஒன்றரை நாட்களாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, வெவிட்ட சந்தியில் வசிக்கும் கயான் ஷசிக பெரேரா என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அலங்கார மீன் வியாபாரியான அவர் தனது முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் பெறுவதற்காக கடந்த 18ஆம் திகதி பண்டாரகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
நெஞ்சுவலியால் மரணம்
உறக்கமின்றி வரிசையில் காத்திருந்த அவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு சென்ற போது நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக பண்டாரகம பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு எவ்வித சிகிச்சையும் வழங்காமல் ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபரை பரிசோதித்த ஹொரண வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர், பண்டாரகம பிரதேச வைத்தியசாலையில் வைத்து அவருக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.