இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற விருந்தில் போதைப் பொருளுடன் 7 பேர் கைது
அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் உட்பட 200 பேர் வரை கலந்துக்கொண்ட, அனுராதபுரம் தஹய்யாகம பிரதேசத்தில் உள்ள ஆடம்ப ஹொட்டலில் நடந்த டி.ஜே. விருந்தில் பங்கேற்ற 7 பேர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் பிராந்திய குற்றப் பணியகம் இவர்களை கைது செய்துள்ளது. இணையத்தளம் வழியாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும், நாக்கின் கீழ் வைக்கும் போதை முத்திரை, 4 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், கேரள கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு அமைய நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து சென்ற 20 வயது முதல் 35 வயதுக்குட்பட 200க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
விருந்தில் கலந்துக்கொள்ளும் ஒரு நபருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. உள்ளே சென்றதும் பணம் செலுத்தியவர்களை அடையாளம் காண அவர்களின் கைகளில் மஞ்சள் பட்டி கட்டப்பட்டுள்ளது.
விருந்துக்கு சென்ற பின்னர், அங்கிருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து போதை மாத்திரை, போதை முத்திரை, கஞ்சா உட்பட போதைப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க முடியும் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் விருந்தில் கலந்துக்கொண்ட பலர் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்ததை அவதானிக்க முடிந்தது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் ஆகியோர் விருந்துக்கு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



