ரணிலிடம் நற்சான்றிதழ் கையளித்த புதிய இராஜதந்திரிகள்(Photos)
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும், உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.
குறித்த நிகழ்வானது இன்று (23.08.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல் குடியரசு ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்
ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த தூதுவர்களை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜேர்மனி பெடரல் குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன், இத்தாலி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் டாமியானோ பிரான்கோவிக் ஆகியோரே நற்சான்று பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர்
சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன
உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.








