ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அதிரடி கொள்கை முடிவுகளுக்கு முன்னதாக, சில மர்ம நபர்கள் மேற்கொண்ட வர்த்தகங்கள் (Trades) மூலம் பல மில்லியன் டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரி விதிப்பு (Tariffs), வெனிசுலா மற்றும் ஈரான் மீதான கட்டுப்பாடுகள் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, சந்தையில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசின் இரகசிய தகவல்கள்
இது குறித்து ஆய்வு செய்த 'ரொய்ட்டர்ஸ்' நிறுவனம், குறைந்தது நான்கு சந்தர்ப்பங்களில் இத்தகைய சந்தேகத்திற்கிடமான வர்த்தகங்கள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் இரகசிய தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், சந்தையின் நம்பகத்தன்மையை பாதுகாக்க இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யு.சி.எல்.ஏ (UCLA) சட்டப் பள்ளியின் உள்வழி வர்த்தக நிபுணர் ஆண்ட்ரூ வெர்ஸ்டீன் இது குறித்துப் பேசுகையில், "இந்த வர்த்தக முறைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளன.
அரச அதிகாரிகள் அல்லது அவர்களின் நண்பர்களுக்குத் தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே இத்தகைய துல்லியமான வர்த்தகம் சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
திட்டவட்டமாக மறுத்துள்ள வெள்ளை மாளிகை
கமாடிட்டி சந்தையில் இத்தகைய முறைகேடுகளைக் கண்டறிவது சிக்கலானது என்றாலும், இது போன்ற அசாதாரண வர்த்தகங்களை சி.எஃப்.டி.சி (CFTC) மற்றும் நீதித்துறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என முன்னாள் அரச சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அரச ஊழியர்கள் பொது வெளியில் வராத தகவல்களை பயன்படுத்தி இலாபம் ஈட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதாரமற்ற இத்தகைய முறைப்பாடுகள் பொறுப்பற்றவை என்றும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் குஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சில வர்த்தகர்கள் தற்செயலான அதிர்ஷ்டம் அல்லது மிகச்சிறந்த சந்தை கணிப்பு மூலம் இந்த இலாபத்தை ஈட்டியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
எது எப்படியிருப்பினும், அமெரிக்காவின் பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
YOU MAY LIKE THIS VIDEO