திரு நடேசனின் தொலைபேசி அழைப்பால் உயிராபத்து! சபாநாயகரிடம் முறைப்பாடு செய்த எம்.பி
திரு நடேசன் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் தனக்கு எடுத்த சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்பு காரணமாக உயிராபத்து குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் ஏதோ ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக உணர்ந்ததன் காரணமாக தான் அது பற்றி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே சமிந்த விஜேசிறி இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் நான் பன்டோரா ஆவணங்கள் சம்பந்தமாக உரையாற்றியமை குறித்து தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் விசாரித்த பின்னர், அது பற்றி பேசியது நல்லது எனக் கூறி, சிரித்து விட்டு, உடனடியாக தொலைபேசியை துண்டித்தார்.
இது சம்பந்தமாக நான் செய்த முறைப்பாட்டுக்கு இதுவரை பொலிஸாரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்த கடந்த 14ஆம் திகதி பிரதமரின் நாடாளுமன்ற விவகார செயலாளர் உதித்த லொக்குபண்டர என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “சமிந்த அண்ணா திரு கதைத்தாரா?” எனக் கேட்டார்.
இந்த நிலையில் என்னுடன் பேசிய நபர் பற்றி சந்தேகம் எழுந்ததன் காரணமாக அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததாக நான் உதித்த லொக்குபண்டரவிடம் கூறினேன்.
இதற்கு பதிலளித்த உதித்த லொக்குபண்டார, தொலைபேசியில் பேசியது திரு தான் எனக் கூறினார் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.