யாழ். தையிட்டி விவகாரம் தொடர்பில் டக்ளஸின் கேள்வியால் தடுமாறிய அதிகாரிகள்
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டது சட்ட விரோத விகாரை என தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளதா என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் (31.05.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு இரண்டாவது கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அமைச்சர் அதிகாரிகளை வினாவியுள்ளார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமான விகாரை அதனை அகற்றி மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விகாரை கட்டும் வரை பார்த்திருந்த பின்னர் தற்போது அகற்றச் சொல்வது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என தனக்குத் தெரியாது என்றுள்ளார்.
இதன் போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விகாரை கட்டும் போது அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபடியால் எமக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், 2021ஆம் ஆண்டு விகாரை கட்டுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போதைய தவிசாளராக இருந்தவர் இந்த சபையில் இருக்கிறார் என்றுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டது எனக் கூறியுள்ளார்.
அதிகாரிகள் பதிவு செய்வார்கள்
பிரதேச செயலக தீர்மானம் அனுப்பப்பட்டால் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டக்ளஸ் கேட்டதுடன் தீர்மானம் இருந்தால் காட்டுங்கள் என்றுள்ளார்.
இதன் போது பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் எங்களிடம் இல்லை மாவட்ட செயலகத்துக்குத் தான் அனுப்பப்பட்டது என்றுள்ளனர்.
அனுப்பப்பட்ட தீர்மானம் இருக்கிறதா என அமைச்சர் மாவட்ட செயலக அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டார் அதிகாரிகளின் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துள்ளனர்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தற்போது ஒரு தீர்மானம் எடுப்போம் தையிட்டியில் கட்டப்பட்டது சட்ட விரோத விகாரை தான் எனக் கேட்க உங்களுடைய கருத்தை வேண்டுமானால் மாவட்ட செயலக அதிகாரிகள் பதிவு செய்வார்கள் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட செல்வராஜா கஜேந்திரன் தவிசாளரே நீங்களும் தையிட்டி விகாரை மக்களுடைய காணிகளில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளீர்கள் ஏன் தீர்மானம் நிறைவேற்ற முடியாது எனக் கேட்டுள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால், நீங்கள் கூறுவதைப் போன்று தையிட்டி விகாரை தொடர்பில் ஏற்கனவே பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையால் அது தொடர்பில் கூட்டத்தில் ஆராய்ந்த பின்னர் மேலதிக விடையங்களைப் பற்றிப் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
