காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: நீதி அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான சர்வதேச விசாரணைகளையும் முன்னெடுப்பதை அரசு கடுமையாக எதிர்ப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
காணாமல்போனவர்களின் எண்ணிக்கை
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் உரையாற்றுகையில், "2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்ட காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 764 பேர் காணாமல்போயுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த எண்ணிக்கை விவாதத்துக்குரியது. காணாமல் போனவர்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் தற்போது எமது வசம் இல்லை." என்றும் தெரிவித்துள்ளார்.
போர்க் காலப்பகுதியில் இரு தரப்பினருமே இத்தகைய காணாமலாக்கல் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசு ஒருபோதும் இத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணை
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு சர்வதேச அமைப்போ அல்லது வெளித்தரப்போ விசாரணை நடத்துவதை அரசு அனுமதிக்காது என்று தெரிவித்த நீதி அமைச்சர், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காகப் போராடி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதம் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.