சிறுமியை கொடூரமாக கொலை செய்த கணவன் - மனைவி? பொலிஸார் வலைவீச்சு
தம்புளை, கலோகஹஎல பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் 14 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அயல்வீடு ஒன்றில் கற்கை நடவடிக்கைக்கு அழைத்து செல்வதாக கூறி, கடந்த 6ஆம் திகதி குறித்த சிறுமி மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மீண்டும் அந்த சிறுமி வீட்டிற்கு வருகைத்தராமையினால் சிறுமியின் பெற்றோர், சிறுமியை அழைத்து சென்றவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். எனினும் அந்த வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் சிறுமி இல்லாமையினால் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அந்த சிறுமி சடலமாக காணப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அங்கு வந்தவர்கள் என கூறப்படுகின்றது. அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர்களான கணவன் மனைவி தற்போது வரையில் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.