பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பான அரசாங்கத்தின் முயற்சி தோற்கடிக்கப்படும்! சஜித்
அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துமானால், அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், அறிவார்ந்த மகா சங்கம், பல்கலைக்கழக சமூகம், பொது சமூக அமைப்புகள், பிற அரசியல் கட்சிகள் மற்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிக்கபோவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலேயே எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கை அமைத்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
இருப்பினும், முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தின் மூலம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தை மீறி உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டு மற்றும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு வெளியே முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தை நிறுவ முயற்சிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகளை நியமித்தல் மற்றும் பல்கலைக்கழகத்தின் பாடவிதானம்,கற்கைகள் குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றி அதை ஒரு மேலாதிக்க கட்டமைப்பிற்குள் உட்படுத்தப்படுகிறது.
முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தில் கற்கைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கும் பராமரிப்பதற்கும் முறையான தரப்படுத்தல் முறை மற்றும் கட்டமைப்பு முறை இல்லை, முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு பிற பிராந்திய பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்க முயற்சிக்கப்படுகிறது போன்ற உண்மைகளின் அடிப்படையில் இந்த சட்டமூலத்திற்கு தாம் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டம் இலவச கல்வி கட்டமைப்பிற்கும் இந்த நாட்டில் அதன் இருப்புக்கும் ஒரு மோசமான பாதிப்பைக் கொடுக்கும். எனவே, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
2021, ஜூலை 16 ம் திகதி பௌத்த ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய ஜனாதிபதி, 1978 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி பல்கலைக்கழகச் சட்டத்தின் சில பகுதிகள் திருத்தப்பட்டு அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் இதுபோன்ற மக்கள் விரோத நோக்கங்களை அடைய பல்கலைக்கழக சட்டத்தைத் தொடக்கூடாது என்றும், பல தசாப்தங்களாக மக்கள் அனுபவித்து வரும் இலவசக் கல்வியின் சலுகையை குறைக்கக் கூடாது என்றும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
முறையான கலந்துரையாடலும் ஒருமித்த கருத்தும் இல்லாமல் பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் கடுமையான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பதை ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.