பொது வேட்பாளர் வந்து விட்டார்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Nillanthan Aug 11, 2024 03:39 PM GMT
Report

தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது.

புரிந்துணர்வு உடன்படிக்கை

அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 29 ஆம் திகதி இறுதியாக்கப்பட்டது.

அதன்பின் ஜூலை மாதம் 22 ஆம் திகதி அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒரு பொதுக் கட்டமைப்பு இயங்கத் தொடங்கியது. அத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிப்பதற்காக அன்றிலிருந்து இயங்கத் தொடங்கியது.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

கடந்த எட்டாம் திகதி ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் மொத்தம் 18 நாட்கள்தான் ஒரு பொது வேட்பாளருக்கான தேடல் மும்முரமாக இடம்பெற்றது.

ஒரு சமூகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயகரமான விதங்களில் தடம் மாற்றக்கூடிய ஒரு குறியீட்டு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கு 18 நாட்கள் சென்றன என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான்.

பொது வேட்பாளர்

அதற்காக 18 மாதங்களை எடுத்துக் கொண்டால் கூட குற்றமில்லை. ஒரு பொது வேட்பாளர் ஒரு பொதுக் குறியீடு என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.

அவ்வாறு ஒரு பொதுக் குறியீட்டை ஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில் கட்சித் தலைவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாக இல்லை.

தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது.

எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதுதான்.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

இப்பொழுது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் அவ்வாறு எல்லாத் தகமைகளும் உடையவர் என்று இக்கட்டுரை கூறவரவில்லை. அரசியலில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையில் எதிலுமே 100% பூரணமானது என்று எதுவும் கிடையாது.

இருப்பவற்றில் சிறந்தவற்றை வைத்துத்தான் அரசியலைக் கொண்டு போகலாம். ஏனென்றால் அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்று பார்த்தால் இருக்கின்றவைகள்தான் சாத்தியக்கூறுகள்.

தாயக ஒருமைப்பாடு

இல்லாதவைகள் அல்ல. இந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளரை பொதுக் கட்டமைப்பு முன் வைத்திருக்கின்றது. தமிழ்ப் பொது நிலைப்பாடு என்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடு தான். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டின் பிரதான மூலக்கூறு தாயக ஒருமைப்பாடு.

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உணர்வுபூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியமான விதத்திலும் ஒன்றிணைக்கும் தேவைகளை அடிப்படையாக வைத்து கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு குறியீடுதான். தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம் என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான்.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம் என்று கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண் வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன.

மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண் வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண் வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரை கண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது.

ஆனால் அங்கேயும் வரையறைகள் இருந்தன.அதன் பின்னர்தான் கட்சி சார்ந்த யாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது. ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்கு சட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன.

தேர்தல் சட்டங்கள்

தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம்.அல்லது ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்குள்ளும்தான் ஒரு பொது வேட்பாளரைத் தேட வேண்டியிருந்தது.

அதாவது தேர்தல் சட்டங்களின்படி ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும்.அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும். தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு.

ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தை தருவதற்குத் தயாராகக் காணப்பட்டன.சில கட்சிகள் தரத் தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொது நிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்ட வாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கே சுட்டிக்காட்டப்பட்டது.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

ஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில்,ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவது தொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஒரு சுயேச்சை வேட்பாளரைப் பொதுக் கட்டமைப்பு முன்நிறுத்தியமை என்பது கட்சிச் சின்னம் கிடைக்காத காரணத்தால் அல்ல.

அதைவிட முக்கியமாக வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கு நிலையில் இருந்துதான் என்று ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேலும் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பொதுகட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவது என்பது பரந்தகன்ற தளத்தில் கட்சிகளைக் கடந்த தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும்.

கடந்த 15 ஆண்டுகளாக கருத்துருவாக்கமாக காணப்பட்ட ஒரு விடயம், இப்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்து விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளர் பரந்தகன்ற தளத்தில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டுவாராக இருந்தால், அதுவே கடந்த 15 ஆண்டுகளில் கிடைத்த மகத்தான வெற்றியாக அமையும்.

தேசியவாத அரசியல்

தமிழ்மக்கள் எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? சில நினைவு கூர்தல்களைத் தவிர மற்றெல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப் பலவாக நிற்கிறார்கள்.

வடக்காக, கிழக்காக, சாதியாக, சமயமாக, கட்சிகளாக, கொள்கைகளாக தியாகிகளாக, துரோகிகளாக, கட்சிகளுக்குள் அணிகளாக, முகநூலில் குழுக்களாக, திருச்சபைக்குள் அணிகளாக, ஆலய அறங்காவலர் சபைகளுக்குள் அணிகளாக,  பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாக,  புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புகளாக, அமைப்புக்களுக்குள் அணிகளாக….எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப் பலவாக நிற்கிறார்கள்.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்?ஒன்றாக நிற்கக்கூடாது என்பதில்தானே ஒன்றாக நிற்கிறார்கள்? தன் பலம் எதுவென்று தெரியாமல்; தன்னைத் தானே நம்பாமல் சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை அகக்கூடிய மட்டும் பெருந் திரளாகக் கூட்டிக்கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஏனெனில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளாகும்.

தங்களை தேசமாக உணரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உணர்வே தேசியம் எனப்படுகின்றது. அக்கூட்டு உணர்வுக்கு தலைமை தாங்குவதுதான் தேசியவாத அரசியல்.

இனப்பிரச்சினை

தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவின் முதன்மை நோக்கமும் அதுதான். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளி உலகத்துக்கு ஒரே குரலில் கூறுவார்களாக இருந்தால், தமிழ் மக்களின் பேர பலம் அதிகரிக்கும்.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 15 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிராக நீதி கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆயுதப் போராட்டம்தான். அது ஒரு விளைவுதான். மூல காரணமாகிய ஒடுக்குமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பொது வேட்பாளர் வந்து விட்டார் | The General Candidate Has Arrived

அதாவது இன ஒடுக்கு முறை நிறுத்தப்படவில்லை. இன ஒடுக்குமுறை எனப்படுவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகத் திரண்டிருப்பதை அழிப்பதுதான்.

தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் காரணிகளை அழிப்பதுதான். அதனால், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெரும் திரளாக தேசிய இனமாக தமிழ் மக்களைத் திரட்டி எடுப்பதுதான் தேசியவாத அரசியல்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு அந்தக் கொள்கை வழிபட்டதே. எனவே தமிழ் மக்கள் முன் இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உண்டு ஒன்று ஒரு தேசமாகத் திரள்வது. அல்லது தன் பலம் எதுவென்று தெரியாத தன்னைத் தானே நம்பாத  ஒரு மக்கள் கூட்டமாகச் சிதறித் தூர்ந்து போவது.


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 11 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US