தேர்தல் நடத்தும் வரை பழைய மாகாண சபையை மீண்டும் இயங்க வைக்கும் யோசனையை முன்வைக்க போகும் சுதந்திரக் கட்சி
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வரை இறுதியாக மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்தி, மாகாண சபைகளை இயங்க செய்யுமாறு அரசாங்கத்திடம் யோசனையை முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களின் பதவிகளை மீண்டும் செல்லுபடியாக்கி, மாகாண சபைகளை இயங்க வைக்கும் யோசனை ஒன்றை அரசாங்கத்திடம் முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளோம். தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக பல ஆண்டுகளாக மாகாண சபைகளில் பிரதிநிதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒதுங்கி இருக்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் போயுள்ளனர்.
மாகாண சுகாதார அமைச்சர்கள் பதவிகளில் இருந்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை இதனை விட சிறப்பாக கட்டுப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இதனால், மாகாண சபைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.