வெருகல் பகுதி காணிகளை உரிமை கோரும் வனத்துறையினர்: சண்முகம் குகதாசன் எம்.பி குற்றச்சாட்டு
வெருகல் பகுதி காணிகளை வனத்துறையினர் உரிமை கோருகின்றனர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (2025.11.24 ) நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை முன்மொழிவின் பொழுது ஆற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

11 பிரதேச செயலாளர் பிரிவு
திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு ஆகும்.
இப்பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை முன்மொழிவு விவாதத்தில் எனது கருத்துகளை எடுத்துரைக்க விழைகின்றேன்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 4,809 குடும்பங்களைச் சேர்ந்த 16, 156 மக்கள் வாழ்கின்றனர்.
இப்பிரதேச செயலாளர் பிரிவானது; ஈச்சிலம்பற்று, வெருகல், பூநகர், இலங்கைத்துறை, நெய்த்தீவு, வெருகல் முகத்துவாரம், இலங்கைத்துறை முகத்துவாரம், கறுக்காமுனை, பூமரத்தடிச்சேனை, உப்பூறல் என 10 கிராம அலுவலர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குத் துறையானது ஈச்சிலம்பற்று , பூநகர், இலங்கைத்துறை, ஆநெய்த்தீவு, வெருகல் முகத்துவாரம், இலங்கைத்துறை முகத்துவாரம், கறுக்காமுனை ஆகிய 07 கிராம அலுவலர் பிரிவுகளை முழுமையாகவும் வெருகல், பூமரத்தடிச்சேனை மற்றும் உப்பூறல் ஆகிய 03 கிராம அலுவலர் பிரிவுகளை பகுதியாகவும் உரிமை கோருகின்றது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பில் 78.78 வீதமான நிலப்பரப்பை வனவிலங்குத் துறையும் 37.16 வீதமான நிலப்பரப்பை வனத்துறையும் உரிமை கோருகின்றன. இவை இரண்டையும் கூட்டிப்பார்க்கும் பொழுது நூறு வீதத்துக்கு பதிலாக 115.94 வீதம் வருகின்றது.
இதனை பார்க்கும் பொழுது இவர்கள் வெருகல் பிரதேச மக்களின் காணிகளைப் பிடிப்பதில் மனம் போன போக்கில் செயற்படுவது புலனாகின்றது.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் மொத்த பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும். இதில் 25,242 ஏக்கரை வனவிலங்குத் துறையும் 11,906 ஏக்கரை வனத்துறையும் உரிமை கோருகின்றன.
இது அந்த பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பை விட 5,106 ஏக்கர் அதிகமானதாகும். 32,042 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இடத்தில் எவ்வாறு வனத்துறையும் வனவிலங்குத் துறையும் 37,148 ஏக்கர் நிலத்தை உரிமை கோர முடியும் என பொது மக்கள் கேலியாக பேசுவதோடு மேற்படி வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளுக்கு கணிதத்தில் நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்குமாறு கோருகின்றனர்.
இத்துறைகள் உரிமை கோரும் இடங்களுக்கு நில அளவைப் படம் எதுவும் இல்லை. மக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள்; எந்த இடத்தில் எந்த வேலையைச் செய்ய முனைந்தாலும் அந்த இடம் தமக்குரியது என வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகள் சொல்லித் தடுக்கின்றனர்.
எனினும் நில அளவைத் திணைக்களத்தினால் வரையப்பட்ட வரைபடத்தில் வனவிலங்குத் துறையின் காணி என எந்த இடமும் அடையாளப்படுத்தப் படவில்லை.

வர்த்தமானி அறிவித்தல்
பொது மக்களின் காணிகளை வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறைக் காணிகள் என வர்த்தமானி அறிவித்தல் செய்யும் பொழுது எதுவித அறிவித்தலோ, களப் பயணங்களோ மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு காணி கையகப் படுத்தும் சட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
எனினும் பொதுத் தேவை கருதி காணிகளை விடுவிக்க பிரதேச செயலாளரால் கோரிக்கை வைக்கப்படும் பொழுது; சட்ட அடிப்படையில் விடுவிக்க முடியாது என குறிப்பிடுகின்றனர்.
இது எவ்வகை நீதி ? வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறையினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட காலத்திற்கு முன்னர் இருந்தே ,வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பொது மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
வனத்துறையும் வனவிலங்குத் துறையும் உரிமை கோரும் பகுதியில் வாழும் 4,778 குடும்பங்கள் நில ஆவணங்களை வைத்திருக்கின்றன. இவர்களில் 1002 குடும்பங்கள் குடியரசுத் தலைவரினால் வழங்கப்பட்ட அளிப்பு பத்திரங்கள் வைத்திருகின்றன.
3526 குடும்பங்கள் மாகாணக் காணி ஆணையாளரினால் வழங்கப்பட்ட காணி ஒப்பங்களை வைத்திருகின்றன.
250 குடும்பங்கள் மாவட்டக் காணி ஆணையாளரினால் வழங்கப்பட்ட காணி ஒப்பங்களை வைத்திருக்கின்றன. வனத்துறையும் வனவிலங்குத் துறையும் உரிமை கோரும் பகுதியில் 18 பாடசாலைகள் அமைந்துள்ளன.
இவற்றில் 3300 மாணவர் கல்வி கற்கின்றனர். 102 சமய வழிபாட்டு இடங்களும் அமைந்துள்ளன. இவற்றுள் இந்து,பௌத்தம் மற்றும் கிறித்தவ வழிபாட்டு இடங்கள் அடங்கும்.
வனவிலங்குத் துறை உரிமை கோரும் பகுதியில் பிரதேச செயலகம், பிரதேச சபை, 10 கிராம அலுவலர் அலுவலகங்கள், மருத்துவமனை, அஞ்சல் அலுவலகங்கள், நீர் வழங்கல் சபை, வங்கிகள், கால்நடைச் சுகாதாரத் திணைக்களம், கமநலச் சேவை நிலையம், காவல் துறைப் பணிமனை முதலிய அரச பணிமனைகள் அமைந்துள்ளன. வனவிலங்குத் துறை உரிமை கோரும் பகுதியில் மக்கள் மரபு வழியாக மேய்ச்சல் தரையாக பன்படுத்தி வரும் ஆவணம் உள்ள நிலங்களும், ஆவணம் அற்ற நிலங்களும் காணப்படுகின்றன.

வெருகல் மக்கள் நெற்செய்கை
வெருகல் மக்கள் நெற்செய்கை மேற்கொள்ளப் பயன்படுத்தும் 18 குளங்களும் அமைந்துள்ளன. வனவிலங்குத் துறை உரிமை கோரும் பகுதியில் மக்கள் எந்த அபிவிருத்தி வேலையையும் செய்ய முடியாது உள்ளது.
மக்கள் மட்டும் அன்றி பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தலைவர், அரச திணைக்களத் தலைவர்கள் முதலியோரும் அபிவிருத்தி வேலைகள் செய்ய வனவிலங்குத் துறை தடை போடுகின்றது.
வெருகலில் உள்ள அரச பணிமனைகள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் தத்தம் இடங்களில் எந்தச் செயற்பாட்டினை மேற்கொள்வதாயினும் வனவிலங்குத் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இந்த ஒப்புதலைப் பெறுவது எளிதானதாக இல்லை. இது மிகவும் சிக்கலான செயற்பாடாக உள்ளது.
இதனால் மக்கள் உரிய காலத்தில் தாம் விரும்பும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
மேலும் அபிவிருத்தி நோக்கம் கருதி நீண்ட காலக் குத்தகைக்கு காணி கேட்கும் விண்ணப்பங்கள், அரச திணைக்களங்களால் விடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த காணிக் கோரிக்கைகள், சுடுகாடு மற்றும் இடுகாடுகள், சிறுவர் பூங்காக்கள்,பொது விளையாட்டு அரங்குகள் முதலியன சார்ந்த காணிக் கோரிக்கை எவற்றுக்கும் காணி வழங்கும் நடவடிக்கை எதனையும் பிரதேச செயலாளரால் முன்னெடுக்க முடியாத சூழலே இப்பொழுதும் காணப்படுகின்றது.
பூநகர் கிராம அலுவலர் பிரிவில் அடங்கும் கல்லரிப்பு கிராமத்தின் ஊடாக பாய்ந்து ; கடலில் விரயமாக கலக்கும் மகாவலி நீரைப் பயன்படுத்தி அண்ணளவாக 2000 ஏக்கரில் இருபோகம் நெற் செய்கை மேற்கொள்ள முடியும். இதன் பொருட்டாக ஒரு மீற்றர் அகலமானதும் ஒன்றரை மீற்றர் ஆழமானதும் இரண்டு கிலோமீற்றர் நீளமானதுமான வெட்டு வாய்க்காலை மறுசீரமைக்க 2024 ஆம் ஆண்டு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த வாய்க்காலை மறுசீரமைக்க வனவிலங்குத் துறை ஒப்புதல் வழங்க மறுக்கின்றது. இந்த வாய்க்கால் ஏற்கனவே அரைக் கிலோ மீற்றர் நீளம் வரை மறுசீரமைக்கப் பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெருகலில் உள்ள அரச அதிகாரிகள் , மக்கள் உள்ளிட்ட அனைவரும் தத்தம் இடங்களில் எந்தச் செயற்பாட்டினை மேற்கொள்வதாயினும் ஒப்புதல் அளிக்க வனவிலங்குத் துறை மறுக்கின்றது.
கால்நடை வளர்ப்பாளர் மரபு வழி
எனினும் இதே வனவிலங்குத்துறை தாம் விரும்பியவாறு காடுகளை அழித்து ஆறு மீற்றர் அகலமானதும் ஏழு கிலோ மீற்றர் நீளமானதும் ஆன வீதியை அமைக்கின்றனர். இதனை என்ன வாதம் என்று சொல்வது என்று அரசாங்கம் தான் சொல்ல வேண்டும்.
வனவிலங்குத் துறையானது கால்நடை வளர்ப்பாளர் மரபு வழியாகக் பயன்படுத்தி வந்த அங்கோடை, மாவிலாறு பகுதி உள்ளிட்ட மேய்ச்சல் தரைகளைப் பிடித்து வைத்துக் கொண்ட; இந்த இடத்தில் காட்டு விலங்குகள் மட்டும் மேயலாம் ஆனால் வீட்டு விலங்குகள் மேயமுடியாது எனத் தடுத்து வருகின்றது.
2008 ஆம் ஆண்டில் 600 கால்நடை வளர்ப்பாளர்களும் 28 000 கால்நடைகளும் வெருகல் கோட்டத்தில் காணப்பட்டன.
போதிய உணவு இன்றி நோயினால் பாதிக்கப்பட்டு இவற்றில் சில ஆயிரம் கால்நடைகள் இறந்து போயுள்ள சூழலில்; இப்பொழுது 15, 200 கால்நடைகள் மட்டுமே எஞ்சி உள்ளன.
கால்நடைகளின் இழப்பிற்கும் கால்நடை வளர்ப்பாளர்களின் பொருளாதார இழப்பிற்கும் பொறுப்பு கூறுவது யார் ? மேலும் கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் பாதுகாப்பது எப்படி ? வனத்துறையும் வனவிலங்குத் துறையும் உரிமை கொண்டாடும் பகுதியில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைகள் அமைந்துள்ளன.
இந்த எல்லைகளை தெளிவாக அடையாளப் படுத்த வனவிலங்குத் துறை சிக்கல் கொடுப்பதால்; மூதூர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவோடு பிணக்குகள் தோன்றுகின்றன.
வெருகல் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் மேற்படி சிக்கல்கள் பற்றி சுற்றாடல்த் துறை அமைச்சர் அறிவாரா? அறிந்திருந்தால் இதற்கு அமைச்சர் என்ன தீர்வை வழங்கப் போகின்றார் ? வெருகல் பிரதேசத்தில் வனவிலங்குத்துறை உரிமை கோரும் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவாரா ? என்பதினை இந்த அவைக்கு கூறுவார? என கேள்வியெழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam