கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டனர்.
இன்று முற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முரசுமோட்டை ஐயன் கோவிலடி பகுதி மற்றும் கண்டாவளை கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளைக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளார் ரி.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாள் எஸ்.கோகுலராஜா, இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் ச.செந்தில்குமரன், கிராம அலுவலர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களிற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.








