ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ரம்சி ராசிக் ஆகியோர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
இலங்கையில் ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்குகளை நீக்கிக்கொள்வதற்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் ஆகியோரின் விடுதலைக்கு, உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைக் கோரி சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டு மனுக்களை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020 ஏப்ரல் முதல் குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ளார், 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் 2020 செப்டம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு குறித்த நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் 14ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு அல்லது விசாரணை எதுவுமின்றி ஒரு வருடம் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அல்லது சட்டத்தரணிகளுக்கு அவரை அனுக அனுமதி வழங்கப்படவில்லை என மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, முஸ்லிம் மத நடைமுறைகளை மீறி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் அரசின் கொள்கைக்கு எதிராக அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
கருத்துச் சுதந்திரத்தின் கீழ் தவறாக செயற்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.
எனினும், அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படாமல், அவர் இந்த தருணம் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒரு வருடமாக தடுப்புக்காவலில் இருந்தபோதும், அவர் செய்த குற்றத்திற்கான நம்பகமான ஆதாரங்களை முன்வைக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
இதேவேளை, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் சமூக ஆர்வலர் ரம்சி ராசிக், ஏப்ரல் 9ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கொரோனா தொற்றுடன் இணைந்ததாக பரவிய பிரிவினைவாதத்தை தோற்கடிக்க, ' ஜிஹாத் சிந்தனைக்கு” தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மற்றும் மற்றும் கணினி குற்றச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் ரம்சி ராசிக், செப்டெம்பர் 17ஆம் திகதி, 161 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், அவருக்கு எதிரான குற்றவியல் விசாரணை இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாப்பதற்காக அன்றி அதனை கட்டுப்படுத்துவதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை, அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்த பல நிகழ்வுகளில் ரம்சி ராசிக்கின் நிகழ்வும் உள்ளடங்குவதாக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்கவும், ரம்சி ராசிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை முடிவுக்குக் கொண்டுவரவும், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, சர்வதேச மன்னிப்புச் சபை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.