இலங்கைக்கு கிடைக்கவுள்ள மற்றுமொரு நிதியுதவி
கோவிட் பரம்பல் காரணமாக பாதிப்புக்குள்ளான ஊவா மற்றும் மத்திய மாகாண மக்களின் சமூக, பொருளாதாரத்தை வலுப்படுத்த கொரிய நிதியுதவி அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரிய நிதியுதவி
கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதி பயன்பாடு
குடிநீர் வசதிகளை மேம்படுத்தல், சுகாதார பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல், தனிநபர் வளர்ச்சியை ஊக்குவித்தல், ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்தல், விளைச்சலுக்கு பின்னரான அறுவடை சேதங்களை மட்டுப்படுத்தல் மற்றும் குடிசைக் கைத்தொழில் ஊடான வருமான வழிகளை அதிகரித்தல் போன்ற விடயங்களில் இந்த நிதி செலவிடப்படவுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள், பொதுநிர்வாக அமைச்சராக இருந்த காலத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதற்கான ஆரம்ப முயற்சிகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.