அசாத் சாலியின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை(Asath Salli) பிணையில் விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் திரும்பபெறப்பட்டதை அடுத்து அதனை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி பிணையில் விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி வசந்த பெரேரா(Vasantha Perera), சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில், அவருக்கு பிணை வழங்கப்படுமாயின் தனது நிலைப்பாட்டை முன்வைக்க சட்டமா அதிபர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன, சந்தேக நபருக்கு எதிராக வேறு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பிணை வழங்கும் கோரிக்கை தன்னால் ஆராய முடியாது எனக் கூறியுள்ளார்.
அப்போது இந்த பிணை கோரிக்கை மனுவை திரும்ப பெறுவதாகவும் மீண்டும் உரிய நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்வதாகவும் அசாத் சாலியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பிணை மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கிய நீதிபதி, பிணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.