நாட்டில் மீண்டும் வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை உருவாக்கப்படும் - ஜேவிபி
நாட்டில் செழிப்பை உருவாக்கும் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால், குறைந்தபட்சம் எரிவாயு மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட மக்களுக்கு வழங்க முடியவில்லை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இன்று செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில் கருத்துரைத்தபோது விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை சீர்ப்படுத்த அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் அல்லது பொறிமுறையும் இல்லை. இதன் விளைவாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் வரிசைகளில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் நிலை உருவாக்கப்படும் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பின் நம்பிக்கைகள்" "இப்போது உடைந்துவிட்டன. ஜனாதிபதி, பிரதமர் அல்லது அரசாங்கத்திற்கு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தொலைநோக்கு இல்லை. முழு நிர்வாக பொறிமுறையும் சரிந்துவிட்டது.
இது ஒழுங்கற்றது மற்றும் எந்த திட்டமும் இல்லாமல் செல்கிறது. யாரும் எதற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி அரசாங்கம் நாட்டை ஆளவில்லை, மாறாக அவர்களுடைய ஒரு சில நண்பர்களைத் திருப்திப்படுத்தவே செயற்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரிசியின் விலை மற்றும் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவது போன்ற சிறிய பிரச்சனைகளில் கூட அரசாங்கம் தலையிடத் தவறிவிட்டது.
பசளைப் பற்றாக்குறை காரணமாக நெல் அறுவடை குறையும் என்பதால் எதிர்காலத்தில் அரிசி விலை இன்னும் அதிகரிக்கும் என்றும் ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா எச்சரித்துள்ளார்.