இரு மதக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்: 15 பேர் கைது-உலக செய்திகள்
இங்கிலாந்தில் லெஸ்டர் நகரில் இரு மதக் குழுக்களுக்கு இடையில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற மோதல்களை அடுத்து 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 28 ஆம் திகதி இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியையடுத்து, லெஸ்டர் (Leicester) நகரில் சிறு மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட குழுக்களுக்கு இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் நேற்று(18.09.2022) லெஸ்டர் நகரில் மீண்டும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
திட்டமிடப்படாத ஆர்ப்பாட்டமொன்றை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 15 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என லெஸ்டஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறைகளை தடுப்பதற்காக லெஸ்டஷயர் நகரில் சில வீதிகளையும் பொலிஸார் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.