இந்தோனேசியாவில் வீதிக்கு இறங்கிய தமிழர்கள்! (PHOTOS)
ஈழத்தில் கடந்த பல தசாப்தங்களாக பேரினவாத சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான தமிழர்கள் உலக நாடுகளெங்கும் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் இம்மாதம் 08 திகதியில் இருந்து மெடான் நகரில் அமைந்துள்ள UNHRC அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் போலவே பல்வேறு நாடுகளின் அகதிகளும் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் ஐ.நா வின் அகதிகளுக்கான நிறுவனத்தில் பதிவு செய்வதன் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கை ஊடாக அங்கிருந்து ஐ.நா வின் அகதிகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மூன்றாம் நாடுகளில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த வசதி கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் ஏதிலிகளுக்கு மறுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே தாம் இப்போராத்தினை முன்னெடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் UNHRC அதிகாரிகளிடம் தாம் பேசியபோது தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள எந்தவொரு நாடும் முன்வரவில்லை என வாய்மூலமாக தெரிவிக்கின்றார்களோ தவிர சட்டபூர்வமாக எந்தவொரு அறிவித்தலையும் இதுவரை தமக்கு வழங்கவில்லையெனவும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் அனைவரும் சீரான முறையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகுந்த மன உளைச்சலுடன் அவல வாழ்க்கையை வாழ்ந்து வரும் தமிழ் ஏதிலிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளமையை கருத்தில் கொண்டு, மீண்டும் தமிழ் ஏதிலிகளை ஐ.நா வின் மீள்குடியேற்ற திட்டத்தில் உள்வாங்கும் படியும் மற்றைய நாட்டு ஏதிலிகள் போல தமக்கான உரிமையையும்,பெற்றுதருமாறு கோரியுமே தாம் இப்போராட்டத்தினை முன்னெடுத்து வருவகாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது நிலை குறித்து புலம்பெயர் வாழ் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கும், அகதிகளின் உரிமை சார்ந்து செயற்படும் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்து மீள்குடியேற்ற நடவடிக்கையில் ஈழ ஏதிலிகளை மீளவும் இணைத்துக்கொள்ளும் படி ஐ. நா விற்கு அழுத்தம் கொடுத்து தமது இருப்பினை உறுதி செய்யுமாறு புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





